மதுரைக்குத் தென்கிழக்கே 160 கி. மீ. தொலைவில் உள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாம்பன் பாலத்தைக் கடந்து செல்ல வேண்டும்.
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று. இராவணனைக் கொன்ற பாவம் நீங்க இராமன் சிவபூசை செய்வதற்கு கயிலாயத்திலிருந்து சிவலிங்கம் ஒன்றைக் கொண்டுவர அனுமனைப் பணித்தார். அனுமான் வரத் தாமதம் ஆனதால் குறித்த நேரத்தில் பூசை செய்வதற்காகச் சீதை மணலால் உருவாக்கிய லிங்கத்தை வைத்து இராமன் வழிபட்டார். பின்னர் அனுமான் கொண்டு வந்த லிங்கமும் இத்தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அம்பாள் சன்னதியில் ஸ்ரீசக்கரம் உள்ளது.
காசி யாத்திரை செல்பவர்கள் அங்கிருந்து கங்கா தீர்த்தம் கொண்டு வந்து இத்தலத்தில் உள்ள இராமநாதேஸ்வரருக்கு அபிஷேகம் செய்துதான் காசி யாத்திரையை முடிப்பார்கள். இத்தலத்தில் 36 தீர்த்தங்கள் உள்ளது. முதலில் அக்னி தீர்த்தம் எனப்படும் கோயிலுக்கு எதிரில் உள்ள கடலில் நீராடி பின்னர் இந்த 36 தீர்த்தங்களில் நீராடி இறைவனை தரிசிக்க வேண்டும். இத்தலத்தில் உள்ள சேதுமாதவர் சன்னதி சிறப்பு வாய்ந்தது.
இக்கோயிலின் வெளிப்பிரகாரச்சுற்று புகழ் பெற்றது. பிரகாரங்களின் மொத்த நீளம் 3850 அடி. வெளிப்பிரகாரத்தில் 1200 தூண்கள் உள்ளது. அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தது. |